கணக்குப்புலி கந்தசாமி மகன்

வழக்கமாக வலையை மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த புதிரைப் பார்க்க நேர்ந்தது, புதிருக்கு விடையும் உடனே கிடைத்துவிட்டதால் பதிலெழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இதோ எனது பதில்.

மு.கு. (அதாங்க முன் குறிப்பு :-) ) :- எனக்கு கதை எழுதத் தெரியாது என்பது எனது மற்ற வலைப்பதிவுகளைப் பார்க்கும் பொழுதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், இருந்தாலும் ...... :-). சரி சரி, பயப்பட வேண்டாம் இது ஏதோ ஆர்வக்கோளாரிலே எழுதிவிட்டேன் இனிமேல கொஞ்சம் கவனமா இருக்கிறேன்.

கணக்குப்புலி கந்தசாமி மகனும் பஞ்சாயத்தும்

புதிரைப் படிக்க இங்கே சுட்டவும். http://kasiblogs.blogspot.com/

ஊர் சனம் எல்லாம் (அமாங்க எல்லாரும்), ஆலமரத்தடியில் கூடுவதற்கு அரை மணிநேரமே பிடித்தது. பண்ணையாரே வழக்கு போட்டிருந்ததால் இவ்வளவு ஆர்வம்.

"இப்படி எல்லாரும் உக்காந்திருந்தா எப்படி என்ன வழக்குன்னு விசாரியுங்க", சொன்னது கூட்டதின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு ஊர் பெரிசு. (நன்றி: தமிழ் சினிமா :- ) )

பண்னையார் அந்த பெரிசை ஒரக்கண்ணால் ஒதுக்கிவிட்டு ஆரம்பித்தார், "நான் இந்த கந்தசாமியோட மவனை காலையில மாடு மேய்க்கிறதுக்காக வேலைக்கு வச்சேன். களவானிப்பய பாதி மாட திருடிப்புட்டான்". கோபத்தில் அவரது பேச்சு வழக்கு வெகுவக மாறியிருந்தது.

"எலே முனிசாமி, உங்கப்பன் எவ்வளவு நாணயமான ஆளு ஆனா உம்மேலெ இப்படி ஒரு வழக்கு. நீ என்னலே சொல்லுதே, மாடெல்லாம் நீ தான் திருடினியா?", பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய பங்கிற்க்கு வழக்கினை சுவாரசியமாக ஆக்கிய புன்னகையோடு மீசையை தடவி விட்டுக்கொண்டார்.

"ஐயா, நான் சாப்பாட்டுக்கு கஸ்டப்படுறவந்தான் ஆனா இவரு சொல்லுறாமாதிரி களவானி இல்லீங்க", பண்ணையாரை "இவரு"ன்னு அழைத்த திருப்தியோடு முனிசாமி மேலும் தொடர்ந்தான்.
"காலயிலெ மாட ஓட்டிட்டு போகும்போது 'வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும்'னு சொன்னாருங்க, அது மாதிரியே செஞ்சேனுங்க. இப்போ என்னனா மாடு கொறையுதுன்னு கூவுறாருங்க"

பஞ்சாயத்து தலைவர் முனிசாமியின் முகத்தில் ஓடிய புன்னகையை கவனிக்காமல் இல்லை. முனிசாமிதான் திருடன் என்று மனதிற்குள் தோன்றியது ஆனால் அதனை நிரூபிக்கும் பொறுப்பில் இருந்ததால் மௌனமாக பண்ணையாரை நோக்கினார்.

"நான் அப்படி சொன்னது உன்மை தான், எண்ணி சரிபாக்குறதுக்கு ஏதுவா இருக்குமேன்னு அப்படி சொன்னேன்", பண்ணையார் தன்னுடைய நிலையை நியாயப்படுத்திவிட்டுத் தொடர்ந்தார். "காலையிலே ஓட்டிட்டு போகும்போது மொத்தமா இருவது மாடுங்க இருந்தது, ஆனா மேஞ்சிட்டு கொண்டுவரையிலெ பாதி மாட காணோம். இந்த்தப்பய ஏதோ கில்லாடித்தனம் பன்னிட்டு நான் சொன்னா மாதிரி அஞ்சு வரிசை இருக்குங்கறான்".

"எலே முனிசாமி, எங்கே அந்த்த அஞ்சு வரிசையை எனக்கு காமி", என்றார் பஞ்சாயத்து தலைவர் அந்த அஞ்சு வரிசை அமைப்பை பார்க்கும் ஆர்வத்தில்.

இதனை முன்னமே அறிந்தவன் போல, "மாடெல்லாம் அப்படி ஏற்கனவே மரத்துக்கு அப்பால நிக்கவச்சுட்டேனுங்க".
உண்மைதான், மாடுகள் மரத்திற்கு பின்புறம் நிற்க வைக்கப்பட்டிருந்தன.

Cows

பஞ்சாயத்துத் தலைவர் அந்த அமைப்பை ஆழமாக நோட்டமிட்டார். பத்து மாடுகளையே வைத்து முனிசாமி அமைத்திருந்த வரிசைகளைப் பார்த்து அவனது அறிவை மனதளவில் பாராட்டினாலும் அந்த அறிவு குறுக்கு வழியில் செல்வதைப்பார்த்து கவலைப்பட்டார்.

ஒரு முடிவுக்கு வந்தவராக, "எலே முனிசாமி நீ மாடு ஓட்டிட்டு போகும் போது பண்ணையார் என்ன சொன்னார்னு வார்த்தை மாறாம சொல்லு" என்றார்.

"'வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும்'னு சொன்னாருங்க"

"நீ இங்க அஞ்சு வரிசையா மாடுங்கள நிக்க வச்சிருக்க, ஆனா அவரு அஞ்சு வரிசைய ஒப்படைக்க தானே சொன்னாரு, சொன்னா மாதிரி அஞ்சு வரிசையையும் ஒவ்வொரு வரிசையா அவரோட தொழுவத்துக்கு அனுப்பு, பண்ணையாரையா நீங்க தொழுவத்துக்கு போகும்பொழுது ஒவ்வொரு வரிசையா எண்ணி சரி பாருங்க"

ஐந்து வரிசையை அனுப்பவேண்டுமெனில் இருபது மாடுகளயும் ஒப்படைக்கவேண்டும், முனிசாமியை இது தனது வழிக்கு கொண்டு வரும் என்ற உறுதியோடு பஞ்சாயத்துத் தலைவர் முனிசாமியைப் பார்த்தார்.
"ஐயா", மெதுவாக ஆரம்பித்தான் முனிசாமி. "என்ன மன்னிச்சுடுங்க. நான் ஒழுங்கா எல்லா மாடுங்களையும் ஒப்படைச்சுடலாமுன்னு தானுங்க இருந்தேன். ஆனா இவரு காலையிலே என்னப்பார்த்து 'போடா போ, நான் பாக்காத கணக்கா.. 'ன்னு பேசினாருங்க. அதான அவருக்கு சவாலா இருக்கனும்னு இப்படி செஞ்சேன்."
"சத்தியமா மாட திருடனும்கிற என்னமில்லீங்க. பத்து மாட முன்னமே தொளுவத்திலே அடைச்சிட்டேனுங்க மீதி பத்து மாடுதான் மரத்துக்கு பின்னால இருக்கறதுங்க".

பஞ்சாயத்துத் தலைவர் இப்பொழுது தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்டார். 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?', கந்தசாமியின் மகனா கொக்கா. என்று நினைத்துக்கொண்டே பண்ணையாரை நோக்கினார்.

அதுவரை கோபமாக நின்றிருந்த பண்ணையாருக்கு காலையில் நிகழ்ந்த உரையாடல் மனதில் தோன்றி மறைந்தது. அவர் முகத்திலிருந்த கோபம் போய் தெளிவு தெரிந்தது.
"நான் வழக்கை திரும்ப வாங்கிக்கறேன், என்னோட கணக்குப்பிள்ளை மேலெ எனக்கு நம்பிக்கை வந்திருச்சு" என்றார் புண்ணகையோடு.

பஞ்சாயத்துத் தலைவரும் புன்னகை பூத்தவராக பஞ்சாயத்தை முடித்துக் கொண்டார்.

"என்ன பஞ்சாயத்துடா இது, ஒரு ருசுவே இல்லெ", முன்வரிசையில் உட்கார்ந்திருந்த ஊர் பெரிசுக்கு நடந்தவை ஒன்றும் புரியவில்லை.



அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்