சிற்றலை
http://www.tamillinux.org/~venkat/myblog/archives/000086.html
கட்டுரையைப் படிக்கும் பொழுதே என்னுடைய சிற்றலை நாட்கள் கண்முன்னே வந்து நின்றன. அவை அருமையான அனுபவங்கள், சிறிய வயதில் தினமும் எனக்கு அலாரமாக பயன்பட்ட காலை 6 மணி செய்தியில் ஆரம்பித்து பின்பு படிப்படியாக பிபிசியின் சிற்றலை ஒலிபரப்புக்கு தாவிய எனது வானொலி ஆர்வம் இன்றும் தொடர்கிறது. இப்பொழுதும் தமிழோசையை கேட்கும் ஆர்வம் போகவில்லை, அனால் ஊடகம் தான் வானொலியிருந்து வலையாக மாறிவிட்டது. http://www.bbc.co.uk/tamil/index.shtml.

அந்நாட்களில் சிற்றலை கூடவே வீட்டில் வேறொரு கொந்தளிப்பு அலையும் வீசும். சிற்றலையினால் வானொலியில் எனக்கேற்பட்ட ஈடுபாடு பின்னர் வானொலிக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவினை எட்டியது, வானொலியிலிருந்து வரும் ஓசையின் மூலத்தை அறிய நான் மேற்கொண்ட முயற்சியில் ஆறு வானொலிப் பெட்டிகள் பலியானது தான் கொந்தளிப்பிற்கு காரணம். பின்னர் அதுவே எனது மின்னணுவியலின் மீதான அதீத ஆர்வத்திற்கு விதையானது. பனிரெண்டு வயதில் ஐசி, ரெஸிச்டர் போன்றவை என்னவென்றே தெரியாமலிருந்த பொழுதே சிப்-சாப் (chip-chap) என்ற மின்னனு செய்முறை தொகுப்பினை (எலெக்டிரானிக் கிட்) அடம்பிடித்து வாங்கினேன். chip-chap, 555 ஐசியை அடிப்படையாகக் கொண்டது மேலும் அது நூற்றுக்கனக்கான மின்சுற்று படங்களையும் அதற்கான விளக்கங்களையும் உள்ளடக்கியது.

வாங்கிய பின் முதல் மூன்று நான்கு மாதங்கள் அது ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்து விழுந்த பண்டம் போல இருந்தது, அதனை கையால் தொடவே பயம். என்னவென்றே தெரியாமலிருந்தாலும், அதை வாங்கியதை நியாயப்படுத்த வேண்டியிருந்ததால் மின்சுற்றுக்களை சற்றே பயத்துடனும், மிக குழப்பத்துடனும் பார்க்கத் தொடங்கினேன். முதல் மின்சுற்றை நிறுவி முடிக்க இரண்டு மாதங்களாயின, அது ஒரு தாள ஒலியெழுப்பி (metronome). முதல் வெற்றியில் கண்ட ஆனந்ததிற்கு அளவே இல்லை, அந்த மின்சுற்றை பிரிக்காமல் வைத்திருந்து வீட்டிற்க்கு யார் வந்தாலும் செய்முறை விளக்கம் அளித்து அவர்களை ஓட வைத்துக் கொண்டிருந்தேன். பின்னர் ஒவ்வொன்றாக அனைத்து மமின்சுற்றுக்களையும் அடுத்த சில மாதங்களிலேயே நிறுவி முடித்துவிட்டேன். இந்த ஆர்வம் என்னை "எலக்டிரானிக்ஸ் ஃபார் யூ" இதழின் வாசகனாக ஆக்கியது. ஒன்பதாவது படிக்கும் பொழுது "ஆனந்த விகடன்", "கல்கி"யை அடுத்து "எலக்டிரானிக்ஸ் ஃபார் யூ"வையும் படி(பார்)க்க ஆரம்பித்தேன். அந்த ஆர்வக்கோளாரே நான் மின்னணுவியல் பொறியாளரானதற்க்கான காரணம். (பின்னர் கணிணி மென்பொருள் மீதான ஆர்வம் ஏற்பட்டதும், மென்பொருள் பொறியாளராக தற்பொழுது பனியாற்றிக் கொண்டிருப்பதும் வேறு கதை).

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்