பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை (2)

பின் தொடருதலில் கவனம் தேவை என்று என்னுடைய முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன், ஆனால் அது மூவபிள் டைப் நிரலியை உபயோகப்படுத்துபவர்களுக்குத்தான் பொருந்தும். இப்பொழுது செய்தியோடை வசதியிலுள்ள இதுபோன்ற ஒரு ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய (கவனிக்கப்படவேண்டிய) விஷயம் (இது மூவபிள் டைப் உட்பட அனைத்து நிரலிகளுக்கும் பொருந்தும்).

( RSS, atom போன்ற செய்தியோடைகளைப்பற்றியும் அதன் நன்மைகளைப்பற்றியும் பலர் வலைப்பதித்திருக்கிறார்கள், விபரங்களுக்கு இந்தப்பதிவையும் பதிவிலுள்ள சுட்டிகளையும் பார்க்கவும்)

நாம் நமது வலைப்பதிவை பதிவிக்கும் பொழுது செய்தியோட்டைகளும் தானாகவே பதிவாகின்றன. இவ்வாறு பதிவான செய்தியோடைகளை படிப்பதற்கு "செய்தியோடைத்திரட்டிகள்" (RSS aggregators) உபயோகப்படுத்தப்படுகின்றன. செய்தியோடைத்திரட்டிகள் பல்வேறு செய்தியோடைகளை சில நொடிகள் சில முதல் நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு புதுப்பிக்க முற்படும். இவ்வாறு முற்படும்பொழுத ஏதேனும் புதிய பதிப்புகள் தெண்பட்டால் அதனை தரவுமாற்றம் (cache) செய்துகொள்ளும். இந்த தரவுமாற்றம் வசதி அனைத்து செய்தியோடை திரட்டிகளிலும் இல்லாமற்போனாலும், பெரும்பாலான திரட்டிகளில் உண்டு. இந்த தரவுமாற்றம் உத்தி செய்தியோடைகள் வேகமாக செயல்பட உதவுகின்றன. ஆனால் இந்த தரவுமாற்றத்தினால் சில சிக்கல்களும் உண்டு. உதாரணத்திற்கு இப்பொழுது ஒரு வலைப்பதிவாளர் தனது ஒரு புதிய பதிவினை உள்ளிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரது செய்தியோடையும் தானாகவே ப(பு)திப்பிக்கப்படும். இப்பொழுது அப்பக்கத்தை பார்வையிடும் செய்தியோடை திரட்டிகள் பதிவுகளை தரவுமாற்றம் செய்துகொண்டு அந்த வலைப்பதிவின் நகலை அதனுள் சேமித்து வைக்கும். அந்த வலைப்பதிவாளர் தனது பதிவினை பிறகு மாற்றினாலும் தரவுமாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் மாறாது. இதனால் என்ன என்கிறீர்களா?
உதாரணத்திற்கு "பெயரிலியின்" பதிவுகளை எடுத்துக்கொள்வோம் (பெயரிலி என்னை மன்னிப்பாராக). மாலைப்பெயரிலி, கண்கானிப்புப்பெயரிலி என்று மாற்றி மாற்றி பதிந்துகொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு பெயரிலி பினாத்துவதற்குப்பதிலாக தன் சொந்தப்பெயரில் பதிந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பதிவினை சரிசெய்வதற்கு முன்னர் ஏதாவது ஒரு செய்தியோடைத்திரட்டி அந்தப்பதிவினை தரவுமாற்றம் செய்துவிட்டால் அவரின் குட்டு உடைபட்டுவிடும்.
இதைப்பற்றிய மற்றுமொரு (பட)விளக்கம் (வலைப்பூ ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையுடன்):


(படத்தை பெரிது படுத்த அதன்மேல் சுட்டவும்).

படத்திலிருப்பது எனது செய்தியோடை திரட்டியில் பதிவுகள் தெண்படும் விதம். இதில் வலைப்பூவிலிருந்து தரவுமாற்றம் செய்யப்பட்ட பதிவின் அசலையும் அதன் திருத்தப்பட்ட இடுகையையும் காணலாம்.

எனவே வலைப்பதியும் முன் இரண்டு முறையேனும் பதிவினை படித்துப்பார்ப்பது நல்லது.

(எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக விடுத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு எச்சரிக்கை வருவதற்கு முன் .... ஜூட்)



அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்

என் இங்கிலாந்து பயணம் (3)

ஃபிரெஞ்சு விசா கிடைக்கவில்லையென்றவுடன் இங்கிலாந்து பயனத்தில் இருந்த அனைத்து உற்சாகமும் செத்துபோய்விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. வேறு வழியின்றி (மனதிற்குள் நன்றாக வசைபாடிக்கொண்டே) "சரி விடுங்க என்னுடைய பாஸ்போர்ட், விமான டிக்கெட் எல்லாம் என்ன ஆச்சு" என்றேன்.
"அதை கூரியரில் அனுப்பியிருப்பார்கள்" என்றார்.
"அப்போ அனுப்பிட்டாங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா?"
"....."
"நீங்க உங்க மும்பாய் ஆபீஸ் நம்பரை கொடுங்க"
இப்பொழுதுதான் அவருக்கு சற்று உறைத்திருக்க வேண்டும், பிறகு அவரே மும்பாய் அலுவலகத்தை தொடர்பு கொண்டு எந்த கூரியரில் பாஸ்போர்ட் வந்து சேரும் என்ற தகவலை சொன்னார்.
"நாளைக்கு காலை அல்லது மதியம் வந்து சேர்ந்துவிடும்"
அப்பொழுது தான் எனக்கு உறைத்தது, மறுநாள் இரவு நான் இங்கிலாந்துக்கு கிளம்பியாகவேண்டும், ஆனால் பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் என்னிடத்தில் இல்லை.
அன்று இரவு துக்கமே வரவில்லை, மறுநாள் காலை முதல் வேலையாக அக்கா அந்த கூரியர் அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். என்னுடைய தபாலைத்தான் முதலில் கொண்டுசேர்ப்பார்கள் என்று உறுதிபடுத்திக்கொண்ட பிறகே தொலைபேசி துண்டிக்கப்படது. சொன்னதுபோலவே ஒரு ஊழியர் எனது தபாலை மட்டும் சுமந்துகொண்டுவந்து கொடுத்துவிட்டு போனார்.
எனது பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும் பார்த்தபிறகுதான் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது.
அன்று இரவு (மறுநாள் காலை?) 1:30 மணிக்கு ஒருவழியாக விமானம் ஏறினேன்.

***************

இங்கிலாந்து வந்து சேர்ந்த பொழுது மணி மதியம் 1:30. ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ரெடிங்கிற்கு பஸ் மூலம் சென்றடைந்தேன். என் உபயோகத்திற்கு ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாமென்ற பொழுதும் நான் அதனை தவிர்த்துவிட்டேன். இங்கிலாந்தில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. இந்தியா மாதிரியே சாலையின் இடது புறம் கார் ஓட்டும் பழக்கம் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்டாலும் சாலைவிதிகள் மிக அதிகம், அதனுடன் சாலையில் உள்ள குறியீடுகள் முதல் முறை பார்ப்பவர்களுக்கு குழப்பத்தையே அளிக்கும் (அமேரிக்க சாலை விதிகளைவிட குழப்பம் நிறைந்தது) .

ஏற்கனவே ஒருமுறை ரெடிங்கில் தங்கிய அனுபவம் இருந்ததால் என் ஹோட்டலை கண்டுபிடிக்க அதிக நேரமாகவில்லை. சென்ற முறை நான் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன், அதனால் தங்கியிருந்த அனைத்துநாட்களும் என் சமையல்தான் (என் பகோடாவிற்கும் பஜ்ஜிக்கும் அங்கு ஒரு சிறு விசிறி குழுவே (ரசிகர் மன்றம்??) ஆரம்பிக்கப்பட்டது என்பதை நான் இங்கே குறிப்பிடவேண்டியதில்லை ). இம்முறை ஹோட்டலில் தங்குவதனால் சமைக்கமுடியாது, ஆனால் ஒரு மாதகாலமும் நினைத்த இடத்தில் சாப்பிடலாம் என்று எண்ணிய பொழுது நன்றாகவே இருந்தது. ஆகவே முடிந்த வரையில் இத்தாலியன், ஸ்பானிஷ் போன்ற அனைத்து விதமான உணவுகளையும் சுவைத்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.


அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்

பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை

தற்பொழுது பின்தொடருதல்(Trackback) வசதி அனேகமாக எல்லா தமிழ் வலைப்பதிவுகளிலும் முளைக்க ஆரம்பித்துள்ளது. பின்தொடருதல் பதிவுகளை தொடர்பு படுத்த (அல்லது அல்கொய்தா மாதிரி வலை அமைக்க) நிச்சயமாக ஒரு மிக நல்ல வழிமுறை. கணினியே ஆனாலும் ஒருத்தரை பின்தொடரும் பொழுது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. (இந்த இடத்தில் ஜாக்கிரதை என்ற வார்த்தையை விட கவனம் என்று உபயோகப்படுத்தி இருக்கலாம ஆனால் பதிவின் தலைப்பு நன்றாக இராதே ). மூவபிள் டைப் போன்ற சில வலைப்பதிவு நிரலிகள், பின்தொடருதலை தாமாகவே மேற்கொள்ளும் (எள் என்றால் எண்ணையாக கொண்டுவரும்). அதாவது நாம் ஏதாவது வலைக்குறிப்பை தொடர்புபடுத்தி பதிவு செய்திருந்‌தோமேயானால், மூவபிள் டைப் நமக்கு வேலை வைக்காமல் தானாகவே அந்‌த வலைக்குறிப்பின் கருத்தில் நமது குறிப்பின் முகவரியையும், அதன் சாரத்தையும் சேர்ப்பித்துவிடும். இவ்வாறு சேர்ப்பித்த சாரம் நமது வலைகுறிப்பில் இல்லாமல் நாம் தொடர்பு படுத்திய வலைகுறிப்பில் குடிகொண்டிருக்கும் அதனால் அந்‌த சாரத்தை நம்மால் மாற்ற முடியாது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா?
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை தவறாக வலைகுறித்து விட்டு பிறகு நமது குறிப்பை மாற்றியமைத்தாலும் இந்த சாரம் காட்டிக்கொடுத்துவிடும்.
சரி இதனால் எனக்கு பின்தொடருதல் தேவையில்லை என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்கள், மேற்சொன்னது மூவபிள் டைப்பிற்கு மட்டும்தான் (நியூக்ளியஸ் எப்படி என்று எனக்குத்தெரியாது), உங்கள் தளம் ஹேலோ ஸ்கேன் போன்ற மூன்றாம் தளங்களிலிருந்‌து பின் தொடருதல் வசதியைப் பெற்றிருந்‌தால் இதுபோன்ற தானியங்கி பின் தொடருதல் நடைபெறாது. மேலும் மூவபிள் டைப் நிரலியில் நாம் இந்த செயல்பாட்டினை மாற்றியமைக்கலாம். எனவே நீங்கள் மூவபிள் டைப் (அல்லது அதுபோன்ற) நிரலியை உபயோகித்தால் அதில் பின் தொடருதல் வசதி எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது(அல்லது எப்படி வேலைசெய்கிறது) என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்